May 19, 2019 தண்டோரா குழு
சூலூர் இடைத்தேர்தலில் 103 வயதிலும் மூதாட்டி துளசியம்மாள் ஜனநாயக கடமையாற்றினார்.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம்,அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடந்து வருகிறது. அந்த வகையில் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர். சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வீதம் 648 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 324 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 324 வி.வி.பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) பயன்பாட்டில் உள்ளது.
324 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.காலை 11 மணி நிலவரப்படி சூலூரில் 25.22% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில் சூலூர் தொகுதியை சேர்ந்த
103 வயதான மூத்த வாக்காளர் துளசியம்மாள் இன்று காலை ஜனநாயக கடமையாற்றினார்.
தள்ளாத வயதிலும் வாக்களிப்பதை கடமையாக கொண்டு வாக்களித்த மூதாட்டியை அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.