May 16, 2019 தண்டோரா குழு
அ.தி.மு.க. அரசிற்கு மக்களை பற்றி கவலையில்லை என சூலூர் தொகுதியில் வாக்குசேகரிப்பின் போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி பகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். மேலும், அப்பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது, ஏராளமான பொதுமக்கள் ஸ்டாலினுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர். கிராம மக்களிடம் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையடுத்து, செலக்கரச்சல் கிராமத்திலும் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, குடிநீர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் கொடுத்த தேநீரை ஸ்டாலின் அருந்தினார்.
இதைதொடர்ந்து, பொதுமக்களிடம் ஸ்டாலின் பேசியதாவது,
” குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காததே காரணம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் இரத்து செய்யப்படும், கேஸ் விலை குறைக்கப்படும். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சணை உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி எந்த பிரச்சனைகளை பற்றியும் கவனிக்காமல் தங்களை காப்பாற்றி கொள்ளவதில் மட்டும் கவனமாக உள்ளது. அ.தி.மு.க. அரசிற்கு மக்களை பற்றி கவலையில்லை பிரதமர் மோடி அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் தலையீடு உள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம், கொடநாடு கொலை, கொள்ளை, பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆகியவை குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விசாரணை நடத்தப்படும். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்,” என தெரிவித்தார்.