December 26, 2019
டில்லியில் மேகமூட்டம் காரணமாக சூரியகிரகணத்தை பார்க்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசய நிகழ்வான நெருப்பு வளையத்துடன் கூடிய சூரியகிரகணம் இன்று(டிச.,26) தோன்றியது. சூரிய கிரகணத்தை நாடு முழுவதும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி சூரிய கிரகணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாட்டு மக்களை போல், சூரிய கிரகணத்தை பார்க்க நானும் ஆர்வமாக இருந்தேன். எதிர்பாராதவிதமாக, மேகமூட்டம் காரணமாக சூரியனை பார்க்க முடியவில்லை. ஆனால், கோழிக்கோடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தெரிந்த சூரிய கிரகணத்தை நேரலையில் பார்த்தேன். நிபுணர்களுடன் கலந்துரையாடி, சூரிய கிரகணம் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன்.
இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளார்.