December 25, 2019
நாளை நிகழும் வளைவடிவ சூரிய கிரகணம் கோவையில் ஒன்றரை நிமிடங்கள் தெரியுமெனவும் பொதுமக்கள் பார்த்து ரசிக்க 20 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக விஞ்ஞான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
சூரிய கிரகணம் தொடர்பாக கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் விஞ்ஞான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
நாளை காலை 8 மணி முதல் 11.15 மணி வரை சூரிய கிரகணம் இந்தியா முழுவதும் சூரிய கிரகணம் தெரியும். நாளை நிகழும் வளைவடிவ சூரிய கிரகணம் கோவை, அவிநாசி,ஈரோடு,கரூர், திருப்பூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட பத்து இடங்களில் சிறப்பான முறையில் சூரிய கிரகணம் தெரியும். காலை 9.30 மணியளவில் நெருப்பு வளையம் போல சூரிய கிரகணம் தெரியுமெனவும் அவர் தெரிவித்தார். மேலும் சூரிய கிரகணம் கோவையில் ஒன்றரை நிமிடங்கள் தெரியும் எனவும் ஊட்டி, காங்கேயத்தில் 3 நிமிடங்கள் தெரியும் எனவும் கூறிய அவர் சென்னை,காஞ்சிபுரம், தென் மாவட்டங்களில் பாதி சூரிய கிரகணம் தெரியுமென தெரிவித்தார்.சூரிய கிரணகம் என்பது இயற்கை நிகழ்வு என்பதால் இது தொடர்பாக அச்சப்பட தேவையில்லை எனவும் இதனை பார்த்து ரசிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் 20 இடங்களில் பொதுமக்கள் கிரகணத்தை பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
சூரியனை எந்த நாளும், எந்த நிலையிலும் நேரடியாக வெறித்து பார்க்க கூடாது. இதனால் கண் பாதிப்படைம் கிரகணத்தை சோலார் கண்ணாடி மூலமாக பார்ப்பது பாதுகாப்பானது. கூலிங் கிளாஸ் அணிந்து பார்க்க கூடாது. கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது, சமைத்த உணவை சாப்பிடக்கூடாது என்பவை கட்டுக்கதை எனவும் சோலார் கண்ணாடி அணிந்தாலும் 3 நிமிடங்கள் தொடர்ந்து பார்க்கலாம். இடைவெளி விட்டு பார்ப்பது நல்லது எனவும் கூறிய அவர் இதற்கு முன்பு தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் 2010 ல் வளைவடிவ சூரிய கிரகணம் தெரிந்தது என தெரிவித்தார்.அடுத்த சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் 2034ம் தெரியும் என அப்போது தெரிவித்தார்.