May 24, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தின் நகரப்பகுதி மற்றும் ஊரக பகுதிகளில் சுய ஊரடங்கு நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அவர்களிடம் அளித்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது,
கோவிட் -19 தொற்று 2 ஆவது அலை கோவை மாவட்டத்தில் மிக தீவிரமாக பரவி வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நடைமுறையில் உள்ளது, இருப்பினும் இச்சூழலை எதிர் கொள்வது பெரும் சவாலாக உள்ளது. கிராம பகுதிகளிலும், கோவை மாநகர உட்பகுதிகளிலும் மற்றும் புறநகர பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் என்பது இருந்து வருகிறது. அதே நேரத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்துவது மிகப் பெரிய கடமையாகும்.
அந்த வகையில் மாவட்டம் முழுவதும் கிராம ஊராட்சி-பேரூராட்சி-நகராட்சி-மாநகராட்சி வார்டுகளில் சுய ஊரடங்கை அமலாக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் வருவாய் துறை- காவல் துறை ஆகியோரைக் கொண்ட விழிப்புணர்வு குழுக்களை ஏற்படுத்தி செயல்படுத்தலாம். வீடுகளுக்குள் சுயமாக முடங்குவது தான் கொரோனா பரவலை தடுக்க உதவும் என்று கருதுகிறோம். அதற்கென நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தியுள்ளார்.