August 13, 2021
தண்டோரா குழு
நாடு முழுவதும் வரும் (15ம் தேதி) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்போது இருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் முழுமையாக சோதனை செய்யப்படுகிறார்கள். 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து பயணிகள் கொண்டு வரும் உடமைகளும் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றன. ரயில் நிலைய நுழைவு வாயில் வழியாக மட்டுமே பயணிகள் வரவேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.