November 5, 2019 தண்டோரா குழு
சுகாதார பணியாளரை தகாத வார்த்தைகளால் பேசிய ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வடக்கு மண்டல உதவி ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 40 வார்டில்,டெங்கு பிரிவில் சுகாதார பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் அமுதா,காளியம்மாள்,ரத்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை ஆவராம்பாளையம் இளங்கோ நகரில் இவர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, மாநகராட்சியின் சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார ஆய்வாளர் இருவரும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து மேற்பார்வையிட வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது மூவரும் கோட் அணியாமல் வேலை செய்து கொண்டிருந்ததை பார்த்து சுகாதார அதிகாரி கட்டாயம் கோட் அணிந்துதான் வேலை செய்ய வேண்டும் எனகூறியுள்ளார்.
இதையடுத்து அமுதா தனக்கு கோட் சிறியதாக இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை எனவும், காளியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் கோட் அணியாமல் இருப்பதாகவும், ரத்னாவிற்கு இன்னும் கோட் வழங்கப்படவில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அப்போது அருகில் இருந்த சுகாதார ஆய்வாளர் திருமால், நீங்கள் மூவரும் தலைவர்களின் மனைவிகளா எனவும் , தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு அவர்கள் வைத்திருந்த மருந்து உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு மண்டல உதவி ஆணையர் தென்றல் ரத்தினத்திடம் சுகாதார ஆய்வாளர் திருமால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தனர்.