November 19, 2019 தண்டோரா குழு
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மற்றும் டெக்ஸ்வேலி சார்பில் ‘வீவ்ஸ் -2019’ சர்வதேச ஜவுளி கண்காட்சி ஈரோட்டில் வரும் 27ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு கோவை சுங்கம் பகுதியில் உள்ள சி.ஐ.ஐ அலுவலலத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது டெக்ஸ்வேலியின் துணை தலைவர் தேவராஜன் கூறுகையில்,
ஈரோட்டில் உள்ள டெக்ஸ்வேலி 2வது ஆண்டாக சர்வதேச அளவிலான ‘வீவ்ஸ்-2019’ என்ற ஜவுளி கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சி வரும் 27ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இதில் நெசவாளர்கள் மற்றும் ஜவுளித்தொழில் முனைவோர் என 250க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் கலந்து கொண்டு தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். உள்நாட்டில் இருந்தும், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மியான்மர், வியட்நாம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து சுமார் ஆயிரத்து 500 கொள்முதலாளர்கள் பங்கேற்கின்றனர். 10 ஆயிரம் பேர் இக்கண்காட்சியை பார்வையிட உள்ளனர். ஜவுளிப்பொருட்களை உற்பத்தி செய்பவரும், அதனை விற்பனை செய்பவரும் நேரடியாக சந்திக்கும் தளமாக இந்த கண்காட்சி அமையும். ரூ.1000 கோடி வரை வர்த்தகம் நடக்கும் என்று எதிர்பாக்கிறோம். கடந்தாண்டு நடந்த கண்காட்சியில் ரூ.4 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது. சுமார் 7 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சி.ஐ.ஐ கோவை மண்டல தலைவர் வரதராஜன், ஷிவேக், டெக்ஸ்வேலி தலைமை செயல் அதிகாரி விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.