October 28, 2019 தண்டோரா குழு
ஈரநெஞ்சம் அறக்கட்டளை ஆதரவற்றோர் முதியோர், குழந்தைகள் தீபாவளியை கொண்டாடாமல் சிறுவன் சுர்ஜித்தை உயிருடன் மீட்க கோரி வேண்டினர்.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஈர நெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் உள்ள முதியோர்களும் குழந்தைகளும் வருடந்தோறும் தீபாவளி தினத்தன்று சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மாலையில் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் 300 அடி ஆழ ஆழ்குழாய் கிணறில் சிறுவன் சுர்ஜித் வில்சன் தவறி விழுந்ததை அடுத்து பலகுழுக்கள் , சிறுவனை உயிருடன் மீட்க கடுமையான முயற்சி செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் சிறுவன் சுர்ஜித்திற்காக மதம் கடந்து மனித நேயம் மலர அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனையடுத்து தீபாவளியை முதியோர் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடமல், சிறுவனுக்காக பிரார்த்தனை செய்தனர். மேலும் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களும் மனச்சோர்வு அடையாமல், விடா முயற்சியுடன் சிறுவனை மீட்க அவர்கள் உடல் மற்றும் மனநலன் பெற வேண்டியும் பிரார்த்தனை செய்தனர். இதயத்திற்குள் ஈரம் இருப்பவர்களின் பிரார்த்தனை இந்தியா முழுவதும் நடைபெற்று வருவது சிறுவனை உயிருடன் மீட்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.