March 29, 2018
தண்டோரா குழு
வினாத்தாள் வெளியான பொருளாதார மற்றும் கணித பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்கிடையில்,தலைநகர் டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் ஒரு சில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழும்பியது.இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல 10ம் வகுப்பு கணித பாட வினாத்தாளும் வட மாநிலங்களில் வெளியானதாக கூறப்பட்டது.இதனையடுத்து,இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியிருந்தார்.இந்நிலையில், 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணித தேர்வு மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேற்று அறிவித்தது.
இதையடுத்து,வினாத்தாள் வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொருளாதாரம் பாடத்திற்கு ஏப்ரல் 24ம் தேதியும்,பத்தாம் வகுப்பு கணிதப்பாடத்திற்கு ஏப்ரல் 26ம் தேதியும் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது.