February 12, 2019
தண்டோரா குழு
சின்னத்தம்பி யானையின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும் தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். எனினும், மீண்டும் சின்னதம்பி யானை ஊருக்குள் திரும்பியது. இதனால், யானையை கும்கியாக மாற்றப்படும் என கூறப்பட்டது. இதற்கிடையில், விலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக்கூடாது அதனை துன்புறுத்தாமல் பத்திரமாக காட்டுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து, உடுமலை பகுதிகளில் உள்ள அமராவதி சர்க்கரை ஆலை, கரும்பு பண்ணையில், கடந்த சில நாளாக முகாமிட்டிருந்த இந்த யானை, தற்போது செம்பழனிபுதூர் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இதனால் சின்னத்தம்பி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
இதற்கிடையில், சின்னத்தம்பி யானை தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், வழக்கை நாளை ஒத்திவைக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் முறையிட்டார். இதுமட்டுமின்றி மேலும், சின்னத்தம்பி யானையை முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக நாளை விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்றும் யானை நிபுணர் அஜய் தேசாய் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சின்னத்தம்பி யானைக்கு இயற்கை உணவுகளை கொடுத்து ஏன் மீண்டும் காட்டுக்குள் அனுப்ப கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்சின்னத்தம்பியின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.