February 2, 2019 தண்டோரா குழு
யானையை கும்கியாக்குவோம் என்று அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது என நடிகர் ஜீவி பிரகாஷ் குமார்கூறியுள்ளார்.
கோவையை அடுத்த பெரிய தாடகம் பகுதியில் இருந்து சின்னதம்பி என்ற காட்டு யானையை வனத்துறையினர் கடந்த 25ம் தேதி பிடித்தனர். பின்னர் வாகனம்
மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு விடப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையில், சின்னத்தம்பி காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வந்துள்ளது. கடந்த இரு தினங்களாக பொள்ளாச்சி பகுதியில் சுற்றி வந்த இந்த யானை தற்போது உடுமைலையை சுற்றியுள்ள பகுதியில் சுற்றி வருகிறது. இதனையடுத்து, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றவுள்ளதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். இதையடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் விரட்டிச்சென்றதில் 100 கிலோமீட்டருக்கு மேல் உணவின்றி யானை சென்றது. அமராவதி சர்க்கரை ஆலை அருகே சின்னத்தம்பி யானை சோர்வில் தரையில் படுத்தது. இதனால் யானை மயக்கம் அடைந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் யானை நடக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அந்த வகையில் இந்த யானைக்கு ஆதரவாக நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் டுவீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்
வாழும் உரிமை அந்த யானைக்கும் உள்ளது, தன் சகோதரனை பிரிந்த சோகத்தில் அலைந்து கொண்டிருக்கும் யானையை மேலும் துன்புறுத்துவது போல் அதை கும்கியாகிவோம் என்று அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது, இரு யானைகளை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.