February 2, 2019
தண்டோரா குழு
சின்னத்தம்பி காட்டு யானையை கும்கியாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை என அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சின்னத்தம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விநாயகன் யானை, கும்கி யானைகளான விஜய், சேரன், ஜான் மற்றும் பொம்மன் ஆகியவற்றின் உதவியதால் பிடிக்கப்பட்டது. பின்னர், வனத்துறைக்குச் சொந்தமான லாரியில் ஏற்றி, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கடந்த 25ம் தேதி விநாயகன் யானையை பிடித்த அதே இடத்தில் சின்னத்தம்பி யானையை மூன்று முறை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர், கலீம், விஜய் ஆகிய கும்கி யானைகளின் உதவியால் அடுத்தகட்டமாக, லாரியில் ஏற்றப்பட்டது. இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு விடப்பட்டது.சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையில், சின்னத்தம்பி காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வந்துள்ளது. தற்போது பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி வருகிறது. இதனால் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து சூழியல் மாநாடு நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று கஜ யாத்ரா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டனர்.
அப்போது விழாவில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,
கடந்த சில நாட்களுக்கு முன்பு தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்ன தம்பி யானை டாப்சிலிப் வனப் பகுதியில் விடப்பட்டது. இந்த யானை தற்போது பல கிலோமீட்டர் தூரம் கடந்து பொள்ளாச்சி, உடுமலை போன்ற பகுதிகளில் வலம் வருகிறது. இந்த யானையை கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சின்னத்தம்பி யானையைக் பிடிக்கும் வழிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் யானையை மீண்டும் பிடிக்கும் பணி துவங்கும் எனவும் அவர் தெரிவித்தார்..