March 15, 2021
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்ய துணைத்தலைவர் மகேந்திரன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் போட்டியிடுகிறார்.இதையொட்டி சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மகேந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகேந்திரன்,
கோவை தெற்கு தொகுதியில் 2 மணிக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். சட்டமன்ற தொகுதி வாரியான தேர்தல் அறிக்கை இந்த வார கடைசியில் வெளியிட உள்ளோம். கொங்கு மண்டலத்தில் மநீமவிற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.
மேலும் கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் மக்களிடம் தங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. மாறி மாறி மக்கள் ஓட்டு போட்டியிருந்தாலும், யாரும் எதுவும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மாற்றத்திற்கான வேட்பாளராக இருப்பேன் எனவும், அதிமுகவின் இலவச திட்டங்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.