August 14, 2019 தண்டோரா குழு
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சிங்காநல்லூர் காவல் எல்லையில் 55 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழாவை மாநகர காவல் ஆணையாளர் துவங்கி வைத்தார்.
கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல், கொலை, கொள்ளை,வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்யவும் மூன்றாம் கண் என சொல்லப்படுகிற கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியானது மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் பாலாஜி
சரவணன் , பெருமாள் ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.
இதில் முதற்கட்டமாக ஆர்எஸ்புரத்தில் துவங்கி, பீளமேடு காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, காட்டூர் காவல் எல்லை,போத்தனூர் காவல் எல்லை என கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது இ-1 சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 55 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல புனரமைக்கபட்ட புறக்காவல் நிலையமும் திறக்கபட்டுள்ளது.இந்த துவக்கவிழா நிகழ்வானது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஐபிஎஸ்,மாநகர காவல் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், பெருமாள் ஐபிஎஸ்,நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் ரமேஷ் கிருஷ்ணா, உதவி ஆணையாளர் சோமசுந்தரம்,சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் முனீஸ்வரன், உதவி ஆய்வாளர்கள் அர்ஜூன் குமார், காசி பாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.