August 31, 2019
சாலை விதிமீறல்களுக்கான அபராத தொகையை குறைக்க வாய்ப்பில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.மேலும் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு குழுவினை துவக்கி வைத்தனர்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சாலை பாதூகாப்பு தொடர்பாக
மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் கொண்டு வந்தாலும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றார். ஜிஎஸ்டி கொண்டு வரும் போது தமிழக அரசு சொன்ன மாற்றங்களை மத்திய அரசு செய்ததாகவும், அதனால் மற்ற மாநிலங்களும் பயன்பெறுகின்றன எனவும் அவர் கூறினார்.
சாலை விதிமீறல்களுக்கு அபராதம் அதிகமாக உள்ள நிலையில், சாலை விதிகளை பின்பற்றினால் அபராதம் கட்ட தேவையில்லை என அவர் தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நாடுகளுக்கு சென்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து வருகிறார் எனவும், சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
போக்குவரத்து துறையில் ஏற்பட்ட இடர்பாடுகளை கலைய, மத்திய அரசுடன் பேசி முதலமைச்சர் ஒரளவு வெற்றி பெற்றுள்ளார் எனவும், சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார். போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுத்த முயற்சியினால் ஒராண்டில் தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் 24 சதவீதம் குறைந்துள்ளது எனவும், தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் 15 சதவீதம் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார். போக்குவரத்து துறையில் 94 சட்ட திருத்தங்களில் 5 சட்ட திருத்தங்களில் மாநில உரிமை பாதிக்கப்படுகிறது எனவும், அவற்றை திருத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு என தனியாக சட்டம் கொண்டு வர முடியாது என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அழுத்தம் திருத்தமாக கூறினாலும், ஏற்படும் பாதிப்புகளை எடுத்து கூறி திருத்தங்களை கொண்டு வருமாறு கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். சாலை விதி மீறல் அதிகமாக உள்ளதால், விதி மீறல்களுக்கு அபராத தொகை அதிகமாகி உள்ளதாகவும், விதிகளை கடைபிடித்தால் தான் விபத்துகள் குறையும் எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை எனவும், கிராம பகுதியில் தலைகவசம் அணிவது குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு நாளைக்கு 47 ஆக இருந்த சாலை விபத்து உயிரிழப்புகள் 33 ஆக குறைந்துள்ளதாகவும், சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் சாலைகள் தரமாக இருப்பதால் வாகனங்களின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் நடக்கின்றன என அவர் தெரிவித்தார்.
இதையடுத்து சாலை விதிமீறல் அபராத தொகையை குறைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, மத்திய அரசு நாடு முழுவதிற்கும் கொண்டு வந்துள்ள திட்டம் எனவும், அதில் மாற்றம் கொண்டு வர முடியாது என பதிலளித்தார். மேலும் அபராதம் அதிகமாக இருந்ததால் தான் விபத்துகள் குறையுமெனவும் அவர் தெரிவித்தார்.