March 11, 2021
தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். மக்கள் அவர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தனித் தனியாக பிரித்து தூய்மைப் பணியாளர்களிடமும், லாரி பணியாளர்களிடமும் கொடுத்திட வேண்டும்.
மண்டல சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவுப்பணி மேற்பார்வையாளர்கள் தினசரி வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குப்பைகளை சாக்கடைகளில் கொட்டாதவண்ணம் கண்காணித்திட வேண்டும். சாக்கடைகளில் அடைப்புகள் ஏதும் இருப்பின் அவற்றை உடனடியாக சரிசெய்திடவும் வேண்டும். நீர் தேங்கியுள்ள இடங்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் கொசு மருந்துகள் தெளிக்கப்பட வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் புகை மருந்துகள் அடிக்கப்பட வேண்டும்.
சாலையோரங்களில் உள்ள பழுதடைந்த வாகனங்களை அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும். பொது மக்கள் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டாமல் குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்டி சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் லட்சுமணன், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.