March 6, 2021 தண்டோரா குழு
கோவையை சேர்ந்த மறைந்த கே.ஜி.ஐ.எஸ்.எல் நிறுவனத்தின் இயக்குனருமான திவ்யலட்சுமி அசோக் நினைவாக இந்திய அளவில் சுய முன்னேற்றம் அடைந்த பெண் சாதனையாளர்களை பாராட்டி திவ்யலட்சுமி என்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புகழ் பெற்ற பெண் சாதனையாளர்களை சமூகத்திற்கு அடையாளப்படுத்தி பாராட்டும் விதமாக ஏழு பெண்களின் சாதனைகளை பாராட்டி திவ்யலட்சுமி விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் இயற்கை விவசாயி என பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள், இந்திய ராணுவ மற்றும் விமான பாதுகாப்பு படையை சேர்ந்த திவ்யா அஜித்குமார், அதிஜீவன் அறக்கட்டளையின் நிறுவனரும் ஆசிட் தாக்குதலில் மீண்டவர் பிராக்யா பிரசுன், ஸ்கிசோ ப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையின் இணை நிறுவனர் தாரா சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்வைத்திறன் இன்றி போராடும் வழக்கறிஞர் கற்பகம் மாயவன், திருநங்கைகளின் உரிமை ஆர்வலர் கல்கி சுப்பிரமணியம் ஆகியோரை பாராட்டி இந்த ஆண்டுக்கான சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டது.