July 19, 2019 தண்டோரா குழு
கோவையில் பெய்த மழையால் ஏற்பட்ட சாக்கடை அடைப்பை சுத்தம் செய்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பாலமானது கோவை மாநகரின் முக்கிய பகுதியாக உள்ளது. இந்த லங்கா கார்னர் ரயில்வே பாலத்தை கடந்து தான் அனைத்து பகுதிக்கும் செல்ல முடியும். தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பாலத்தின் கீழ் செல்கிறது. ஆனால் மாநகரில் லேசான மழை பெய்து விட்டாலே இந்த பாலத்தின் கீழ் நீர் தேங்குவது வழக்கம். இப்படி நீர் தேங்கும் பொழுது வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அதேபோல கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்சுகளுக்கும் இது பெரிய இடைஞ்சலாக ஏற்படுகிறது
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென பெய்த மழையினால் வழக்கம் போல லங்கா கார்னர் பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியது. அதேபோல போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகனங்கள் அந்தப் பகுதியைக் கடக்க முடியாமல் சிரமம் அடைந்தனர். பொதுமக்களின் சிரமத்தை அறிந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி, ஆகியோர் சாக்கடை அடைப்பை எடுத்து தேங்கிய நீரை வெளியேற்ற முயன்றனர். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி சாக்கடையின் மேல் நின்று குச்சியால் குத்தி அடைப்பை நீக்கினார். இதையடுத்து தேங்கிய நீரானது மெல்ல மெல்ல வடிந்து சரியானது. இந்தநிலையில் இந்த போக்குவரத்து காவலரின் சீரிய முயற்சியைக் கண்ட பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து சென்றனர்.
வாகன சோதனையின்போது போக்குவரத்து போலீசாருக்கும் பொது மக்களுக்கும் அடிக்கடி சில வாக்குவாதங்கள் உருவானாலும் நேற்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் பொது மக்களின் சேவைக்காக சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு உதவும் வகையில் பணியாற்றிய போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களை, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.