March 7, 2021
தண்டோரா குழு
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள ஆல் சோல்ஸ் சர்ச் 150-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக அடிமைத்தனத்தில் இருந்து பெண்கள் விடுபடுவது என்னும் மைய கருத்தின் அடிப்படையில் இன்று காலை விழிப்புணர்வு பேரணி ஆல் சோல்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.இந்த பேரணியை ஆல் சோல்ஸ் சர்ச் தலைவர் மற்றும் பாதிரி அருட்திரு சார்லஸ் சாம்ராஜ் ஆல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பெண்கள் ஐக்கிய சங்க தலைவர் லத்திகா சார்லஸ் கூறுகையில்,
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும், 150-வது ஆண்டு விழாவை கொண்டாடும் கோயமுத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஆல் சோல்ஸ் தேவாலயம் சார்பில் பெண்களுக்கு சமூக அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவது குறித்து இப்பேரணி நடத்தப்பட்டது.
மேலும் பெண்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதற்கும் பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதற்கும் இச்சபையின் பெண்கள் ஐக்கிய சங்கம் ஊர்வலம் நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் பெண்களின் உரிமைகள், பெண்களின் அதிகாரம் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிலை படுத்தவும் இப்பேரணி நடைபெற்றது என்றார்.