October 26, 2019 தண்டோரா குழு
பத்ம ஸ்ரீ விருது பெற்ற யோகா ஆசிரியர் நானம்மாள் (99) கோவையில் காலமானார்.
கோயமுத்தூர் கணபதி பகுதியில் வசித்து வந்தவர் நானம்மாள்,பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு வேளாண்மை குடும்பத்தில் பிறந்தவர். தனது தாத்தா மன்னார்சாமிடம் இருந்து யோகாசனம் கற்றுக்கொண்ட இவர் இறக்கும் வரை கடினமான யோகாவையும் சர்வ சாதாரணமாக செய்து வந்தார்.
இவரிடம் யோகா கற்றுக்கொண்ட 600க்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் யோகா ஆசிரியையாக உள்ளனர். இதில் 36 பேர் இவரின் குடும்பத்தினர் ஆவர். இவரது யோகா கலையைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து ஸ்தீரி சக்தி புரஸ்கார் விருது மற்றும் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை பெற்றிருக்கிறார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 99.
தனது 99 வயது வரை யோகா செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் நானம்மாள் பாட்டியின் இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.