February 6, 2019 தண்டோரா குழு
சபரிமலை விவகாரத்தில் பெண்களை இரண்டு துண்டாக வெட்டவேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கொல்லம் துளசி கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு கேரளா மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இதை கண்டித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போராட்டம் நடத்தின.
இதில் பங்கேற்ற மலையாள நடிகர் கொல்லம் துளசி, சபரிமலை தீர்ப்பு குறித்தும், தீர்ப்பளித்த நீதிபதிகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். இதுமட்டுமின்றி சபரிமலை கோவிலுக்குள் நுழையும் இளம்பெண்களை 2 துண்டாக வெட்ட வேண்டும். ஒரு துண்டை டெல்லிக்கும், மற்றொரு துண்டை முதல்–மந்திரி பினராயி விஜயன் அலுவலகத்துக்கும் அனுப்ப வேண்டும் என்று பேசினார்.
அவருடைய இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து துளசி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.அவருடைய மனுவை கேரள உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில்,பல்வேறு தரப்பினரின் கண்டனத்தால் தன்னுடைய தவறுக்கு கொல்லம் துளசி மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் சவாரா போலீசில் அவர் நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.