March 7, 2019
தண்டோரா குழு
சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் – விஜய் கூட்டணியில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.
இப்படத்தில் இலவசங்கள் வேண்டாம் உள்ளிட்ட சில காட்சிகள் அரசியல் கட்சியினரின் எதிர்ப்புக்குள்ளாகியது. எனினும் இப்படம் வசூல் ரீதியில் சாதனை படைத்தது. அதைபோல், மக்கள் வாக்களிப்பதன் அவசியத்தையும் இந்தப் படம் பேசியிருந்தது. இப்படத்தில் உங்கள் வாக்கை மற்றொருவர் பதிவு செய்து விட்டால் என்ன செய்வது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 49P பிரிவு குறித்து பேசப்பட்டது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒரு விரல் புரட்சி என்ற 49P பிரபலமானது.
இந்நிலையில்,சர்கார் பட பாணியில் 49P பிரிவை விழிப்புணர்வு பிரச்சாரமாக முன்னெடுத்துள்ளது தேர்தல் ஆணையம். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை வேண்டாம் 49P பிரிவை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம் என்று விளம்பரப்படுத்தி வருகிறது. இதனை ஏ.ஆர் முருகதாசும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகர்ந்துள்ளார்.
அதைபோல், விஜய் ரசிகர்களும் இதனை சர்கார் படத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாக தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.