June 25, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள், தூய்மை பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 72வது வார்டு காட்டூர் பகுதியில் உள்ளது செல்லப்பகவுண்டர் வீதி. இந்த வீதியில் சாலையோரங்களில் உள்ள குப்பை மேடுகளை, பொக்லைன் இயந்திரம் கொண்டு தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் தூய்மை பணியாளர்களிடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிக சிறப்பாக செய்திட வேண்டும். நேரம் தவறாமல் வருகை புரிந்திட வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.77.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.
அப்போது கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் சரியான அளவில் கட்டப்பட்டுள்ளதா? என அளவு நாடா மூலம் ஆய்வு செய்தார். பின் அப்பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது மாநகர பொறியாளர் லட்சுமணன், மத்திய மண்டல உதவி கமிஷனர் சிவசுப்பிரமணியம், செயற் பொறியாளர் பார்வதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.