January 1, 2019 தண்டோரா குழு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பெண்களை அனுமதிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 620.கி.மீ பெண்களின் மதில் சுவர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் சபரிமையில் பெண்கள் நுழைவதற்காக போராட்டங்கள் நடைபெற்றன. சபரிமலையில் சாமி தரிசனத்துக்காக செல்லும் பெண்களை தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க கேரள போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதற்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சபரிமலையின் புனிதத்தை காக்க வலியுறுத்தி கடந்த டிசம்பர்-26 ஐயப்ப பக்தர்கள் கேரளா முழுவதும் ஐயப்ப ஜோதி ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போரட்டங்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பினராயி விஜயன் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பெண்கள் அமைப்பினருடன் ஆலோசனையும் நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில் பெண்கள் திரண்டு பிரம்மாண்டமாக மனித சங்கிலி போன்ற போராட்டம் நடத்தப்படும் என்று முடிவெடுத்தனர்.
இந்நிலையில், “பெண்கள் மதில் சுவர்” மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. இன்று மாலை தொடங்கிய இந்த போராட்டத்தில் பெண்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த போராட்டத்திற்கு “வனிதா மதில்” என்று பெயர் வைக்கப்பட்டது. இப்போரட்டமானது வட கேரளத்தின் காசர்கோட்டிலிருந்து தென் கேரளத்தின் பாறசாலை வரை 620 கி.மீ. தொலைவுக்கு பெண்கள் வரிசையாக நின்று மனிதச் சுவரை அமைக்க உள்ளனர். இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல சுமார் 31 லட்சம் பெண்கள் கலந்துகொள்வார்கள் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் மாவோயிஸ்டுகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் இப்போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் போராட்டம் நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு அனைத்திலும் சமமான உரிமை வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து பெண்கள் இன்று அணி திரண்டனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் காசர்கோட்டில் நடக்கும் இதன் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.