December 23, 2019
கோவை சுந்தராபுரம் அருகே வீட்டில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மென் பொறியாளர் உடற்கூறாய்வு அதே இடத்தில் செய்யப்படுகிறது.
கோவை சுந்தராபுரம், குறிச்சி கல்லுக்குழி வீதியை சேர்ந்த சக்திவேல் (42) பெங்களூரில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தவர். கடந்த மூன்று ஆண்டுக்கு முன் பணியில் இருந்து விலகி, கோவை வந்த சக்திவேல் அவரது மனைவி அழகு மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சக்திவேலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாத சக்திவேல், திருநெல்வேலியை சேர்ந்த அக்கா வீட்டாருடன் மட்டும் செல்லிடப்பேசியில் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக எந்த தொடர்பும் இல்லாததால், சந்தேகமடைந்த அவரது அக்கா மகன் தினேஷ், கோவையிலுள்ள சக்திவேலின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு திறந்திருந்ததால், உள்ளே சென்று பார்த்த போது, எரிந்த நிலையில் சடலம் இருப்பதும் அதன் மீது சணல் சாக்கு, தேங்காய் சிரட்டைகள், காகிதங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தினேஷ் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீஸார், எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் சக்திவேல் என்பதை உறுதி செய்தனர். மண்ணெண்ணைய் மற்றும் தேங்காய் சிரட்டைகள், காகிதத்தை கொண்டு உடல் எரிக்கப்பட்டதும், சுமார் 4 மாதங்களுக்கு முன்பு சம்பவம் நடந்திருக்க கூடும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், உடல் பெருமளவு சிதலமடைந்துள்ளதால், தற்போது, உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சம்பவம் தொடர்பாக 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.