September 20, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் உளவுத்துறை சரியாக கண்காணிக்கவில்லை என்றால் பேரழிவை நோக்கி தமிழகம் போகும் என கோவையில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவையில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. அமைப்பின் வளர்ச்சிக்காக பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.கேரளாவில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர், கோவையில் தொடர்ச்சியாக பங்களாதேஷ் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதுடன், அவர்கள், ரேஷன் கார்டு,ஆதார் அட்டை போலியாக பெற்றுள்ளனர்.தமிழகத்தில் உளவுத்துறை, சரியாகி கண்காணிக்கவில்லை என்றால் பேரழிவை நோக்கி தமிழகம் போகும். என்.ஐ.ஏ.மட்டும் தான் பயங்கரவாதிகளை பிடித்து வருவதாக சுட்டிக்காட்டியவர், நமது உளவுத்துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியான நபர்களை நியமிக்க வேண்டும் என்றும், நக்சலைட் சிந்தனையுடன் உளவுத்துறையில் சிலர் இருப்பதாகவும், திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களை கெடுக்க சர்வதேச சதி உள்ளதால் தனிக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும்,மக்கள் வரும் தேர்தலில் யார் மக்கள் நலனில் அக்கறை செலுத்துகின்றனர் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர்,இந்து முன்னணி அது சார்ந்து விழிப்புணர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.சசிகுமார் படுகொலை வழக்கை வேகப்படுத்தி முடிக்க வேண்டும் என்றும், கொரோனாவை அரசு நன்றாக தான் கையாண்டாலும், புரட்டாசி சனிக்கிழமையான நேற்று பல கோவில்கள் மூடப்பட்டிருப்பதற்கு அரசிற்கு கண்டனம் தெரிவித்தார்.