May 13, 2019 தண்டோரா குழு
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் சூலூர் தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமாருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரையில் புரட்சி பெருந்தகை என்று பட்டம் கொடுத்து இருக்கின்றனர் பார்த்தீர்களா? அவருக்கு புரட்சி பெருந்தொகை என்று பட்டம் கொடுத்தால் சரியாக இருந்திருக்கும். மதுரையில் ராஜன்செல்லப்பாவின் மகன் ஐஸ் வைப்பதற்காக இந்த பட்டத்தை கொடுத்து இருக்கின்றார்.
மோடியிடம் மண்டியிட்டு தோப்புகரணம் போடுபவர்களுக்கு எல்லாம் புரட்சி பட்டம் கொடுக்கின்றனர்.
ஜெயிலுக்கு போகும் போது சகோதரனாக நினைத்து சசிகலா , எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார். துரோகத்தில் வேண்டுமானால் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சி பட்டம் கொடுக்கலாம். வீரபாண்டிய கட்ட பொம்மன்,கப்பலோட்டி தமிழன் என்றால் சிவாஜி நினைவிற்கு வருவார்.மதுரை வீரன் என்றால் எம்.ஜி.ஆர் நினைவிற்கு வருவார், அதே போல எட்டப்பன்கள் என்றால் எடப்பாடி பழனிச்சாமி நினைவிற்கு வருவார்.
சின்னம்மாவிற்கு துரோகம் செய்துவிட்டு சுத்துவீங்க, உங்களை விட்டுறுவமா? திருப்பரங்குன்றத்தில் ஓ.பி.எஸ் பெண்களிடம் கெஞ்சுவதை பார்த்து இருப்பீர்கள். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் இரத்தகண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி சுத்தப்போகின்றனரா? இல்லையா? என பாருங்கள். கொங்கு மண்டல மக்கள் துரோகத்திற்கு எப்போதும் துணை நிற்கமாட்டார்கள்.
புரட்சி பெருந்தொகை எதில் லாபம் அதிகமா இருக்கின்றதோ அதைதான் செய்வார். சம்மந்தி, சகலை, ரகளை ஆகியோரின் வருமானத்தை பெருக்க புரட்சி பெருந்தொகை செயல்படுகின்றார்.
நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது. இதை ராஜதந்திரம் என அவரது ஜால்ராக்கள் சொல்கின்றனர். வரும் 23 ம்தேதியோட ராஜதந்திரம் முடிய போகுது.எங்களுக்கு அநீதி, இழைக்கப்பட்டுள்ளது. அந்த அநீதிக்கு நீங்கள்தான் நியாயம் சொல்லவேண்டும்.
அரசு ஊழியர் ஆசிரியர், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் துரோகத்தை ஒழிக்க
அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். சின்னியம்பாளையம் பகுதியில் ஆரம்பசுகாதார நிலையம் அமைக்கப்படும். கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யவும், பள்ளியில் கூடுதல் கட்டடிடம் அமைக்கவும், அவினாசி சாலையில் சுரங்க நடைபாதை அமைக்கவும், விசைத தறி நெசவாளர்களுக்கு மின்கட்டண சலுகை ,
60 வயது கடந்த நெசவாளர்களுக்கு ஒய்வூதியம்போன்றவை வழங்கவும்
நடவடிக்கை எடுக்கப்படும்.புரட்சி பெருந்தொகையின் ஆட்சியை காலி பண்ணி புரட்சிதலைவரின் ஆட்சி அமைக்கப்படும்.பதவிக்காக துரோகம் செய்வதை இனி யாரும் நினைத்து கூட பார்க்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.