September 20, 2019 தண்டோரா குழு
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக எதிர்பாராத பேரிடர், இயற்கை பேரழிவு, விபத்தின்போது விரைவாக செயல்பட ஒரு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கணபதி அருகே ஸ்ரீராமகிருஷ்ணா நகர்புற சுகாதார மையம் எதிர்பாராத விதமாக இயற்கை சீற்றம் மற்றும் விபத்து நேரிடும்போது, எப்படி செயல்பட வேண்டும், என்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சியை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் நடத்தியது. ஒரு விபத்து நடக்கும் சமயத்தில் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். என்ன தவறுகள் நேரும்; அதை தவிர்ப்பது எப்படி என்பதற்கான பயிற்சியாகவும் இது நடந்தது. ஒத்திகை விபரம் கோவை கணபதி ரோட்டில் ஒரு சுற்றுலா பேருந்து 25 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக ஒரு இருசக்கர வாகனத்தில் குறுக்காக வந்தவர்களை தவிர்க்க முயன்றபோது, அது ஒரு மதில் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்து குறித்து உடனடியாக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு தகவல் வருகிறது. தகவல் வந்தவுடன், காயமடைந்தவர்களை கவனிக்க ‘மஞ்சள் நிற எச்சரிக்கை’ அனைவரையும் உஷார்படுத்துகிறது. மஞ்சள் நிற எச்சரிக்கை வந்தவுடன் மருத்துவ வல்லுனர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், தீவிர சிகிச்சைக்கு குறிய தேவையான உபகரணங்களுடன் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு செல்ல விரைந்தனர்.அதேசமயம் மருத்துவமனையில் உள்ள உள் சிகிச்சை குழுவும் தயாராகிறது. வழி ஏற்படுத்தவும், பிரச்னைகளை தீர்க்கவும், பத்திரிக்கை, ஊடகத்தினரை கையாளவும் தயார் நிலையில் உள்ள குழுக்கள் தனித்தனியாக செயல்பட்டன.
காயமடைந்தவர்களை பற்றிய தகவல்களை அளிக்க தனி குழு செயல்பட்டது. நோயாளிகளுக்கு விரைவாகவும், திறம்படவும் சிகிச்சை அளித்தனர். காயமடைந்த 21 பயணிகள் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டனர். அதிகம் காயமடைந்த 5 பேர், சிவப்பு டிரையேஜ் குழுவினரும், மஞ்சள் குழுவினர் ஓரளவு காயமடைந்த 8 பேருக்கு சிகிச்சை அளித்தனர். லேசான, மிதமான காயமடைந்தவர்களுக்கு பச்சை வண்ண குழுவினரும் சிகிச்சை அளித்தனர். ஒரு நோயாளி இறந்து விடவே, அவர் கருப்பு அடையாளமிட்டு, தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டார்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, எவ்வித சிக்கலான நிலையிலும் சிறப்பாக செயல்பட மருத்துவமனை ஊழியர்களுக்கு பயிற்சியாக அமைந்தது. எந்த சமயத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியது. நிறைவில், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி, விபத்தில் காயமடைந்தோர்களை பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும் ஊடக, பத்திரிக்கையாளர்களிடம் விளக்குவதாக ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.