October 28, 2017
தண்டோரா குழு
கோவை உக்கடம் அடுத்த வாளாங்குளத்தில் அழுகிய நிலையில் இரண்டு ஆண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.இந்நிலையில் கோவை உக்கடம் அடுத்த வாலாங்குளத்தில் இரண்டு ஆண் சடலங்கள் கிடப்பதாக உக்கடம் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனர்.அதை தொடர்ந்து குளக்கரையிலிருந்த குப்பை மேட்டில் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கிய நிலையில் கிடந்த 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவ்விருவரும் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டனரா அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.அதே வேளையில் ஒரே நேரத்தில் குளத்திலிருந்து இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.