March 29, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் விதம் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் மூன்று குழுக்களாக சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். அதுபோலவே வீடியோ கண்காணிப்பு குழு ஒரு தொகுதிக்கு இரண்டு குழுக்கள் வீதம் 12 மணி நேரம் செயல்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு குழுவிலும் துணை வட்டாட்சியர் நிலைக்கு குறையாத அலுவலர் தலைமையில் ஒரு சார்பு ஆய்வாளர், 2 காவலர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி வரை இதுவரை ரூ.4.55 கோடி ரொக்கம், ரூ.61.96 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களாக ரூ. 47.92 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ. 53.09 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்படும் தொகை மற்றும் இதர பொருட்களுக்கு உரிய ஆவணங்களை சம்மந்தப்பட்டவர்கள் சமர்ப்பித்த பின் மாவட்ட கண்காணிப்புகுழுவின் பரிந்துரையின் படி விடுவிக்கப்படும். மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.