February 12, 2021 தண்டோரா குழு
கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் காரணமாக கோவை -மேட்டுப்பாளையம் இடையே பேருந்துகள், கார்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மீண்டும் பயணிகள் ரயில் சேவையை துவங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன. தற்போது, தமிழகத்தில் பல்வேறு வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோவை – மேட்டுப்பாளையம் இடையே தினசரி ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஜமீல் அஹமது கூறியதாவது:
கொரோனா தாக்கம் குறைந்து தற்போது, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து நிறுவனங்கள், தொழில் கூடங்கள், வியாபார அமைப்புகளும் முழுமையாகச் செயல்பட்டு வருகின்றன.வழக்கமாக கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படும். இதற்கிடையே, கடந்த மாதம் முதல், கவுண்டம்பாளையத்தில் மேம்பால கட்டுமானப் பணி காரணமாக பேருந்துகள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, கோவை – மேட்டுப்பாளையம் இடையே தினமும் 5 முறை இயக்கப்பட்ட பயணிகளை ரயிலை மீண்டும் இயக்கினால், கோவை – மேட்டுப்பாளையம் இடையை சாலையில் பயணிப்போர் ரயிலில் சென்று வருவார்கள். இதனால், மாணவர்கள், பணிக்குச் செல்வோர் உரிய நேரத்தில் கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்ல முடியும் என்றார்.