April 18, 2021
தண்டோரா குழு
மறைந்த நடிகர் விவேக்கிற்கு கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அவரின் நினைவாக 59 மரக்கன்றுகள் நடப்பட்டது.
பிரபல நகைச்சுவை நடிகரும்,மரங்கள் நடும் ஆர்வலரும் ஆன நடிகர் விவேக் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். தமிழகம் மட்டுமின்றி பெரும் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் படி கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக அதன் தலைவர் சாகுல் தலைமையில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆத்துப்பாலம் பாப்புலர் வளாகத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக குட்டிப்புலி பிரபல நடிகர் ராஜசிம்மன், நகைச்சுவை நடிகர் சாப்ளின் பாலு,விஜய் மக்கள் இயக்க மாணவரணி தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மறைந்த நடிகர் விவேக்கின் ஆன்மா சாந்தியடைய அவரது படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சின்னக்கலைவாணர், நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரங்கள் நடும் பணியை அனைத்து இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் தொடரும் வகையில்,அவரது 59 வது பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக அந்த வளாகத்தில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டது.
கோவை மாவட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் ஜெயன்,பூபேஷ்,மற்றும் உபைதுர் ரஹ்மான், உமர், முஜி, ஜலீல், பாபுகான் மற்றும் வெண்ணிலா ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.