May 15, 2021
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.கொரோனா தொற்று முதல் அலையில் இருந்ததைவிட அதன் பரவும் வேகம் இரண்டாம் அலையில் மிக அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததைவிட தற்போது மூன்று முடங்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவது என்பது மிகவும் அவசியமான பணியாகும்.தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்று ஒருவார காலத்திற்குள் நான்கு முறை கொரோனா பேரிடர் தொடர்பாக ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளார்கள். குறு, சிறு தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழில்அமைப்புகள், மருத்துவர்கள் மற்றும் அனைத்து கட்சிளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் தன்னர்வதொண்டு நிறுவனங்களின் பங்கு மிக சிறப்பாக உள்ளது.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய அளவு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள் கொரோனா சிகிச்சை பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 19 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இம் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதித்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கவேண்டும்.
வனத்துறை அமைச்சர், உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் கடந்த 4 நாட்களாக கோவை மாவட்டத்திலே தங்கியிருந்து ஆலோசனை கூட்டங்கள், ஆய்வுகள் நடத்தியதுடன் கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல்தவணை வழங்கும் பணியினை துவக்கி வைத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் 1000 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா தொற்றுக்கு சித்தா,ஆயுர்வேதம், ஹோமியோபதி,யுனானி மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொடிசியாவில் தற்போது 1500 படுக்கைவசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 654 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றன.
மேலும் கொடிசியாவிலேயே 100 படுக்கைகள் வசதிகளுடன் சித்தா மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகத்திற்கு 7000 ரெம்டசிவர் மருந்துகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால் 20000 ரெம்டசிவர் மருந்துகள் தேவைப்படுகிறது. மத்திய அரசு கூடுதலாக மருந்துகள் வரும்போது சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்திற்கு ரெம்டசிவர் மருந்துகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார் .
இவ்ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நாகராஜன் , நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், கந்தசாமி, ஜெயராமன், அமுல் கந்தசாமி, வானதி ஸ்ரீனிவாசன், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .