December 30, 2019
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைப்பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் 5 ஒன்றியங்களுக்கு கடந்த 27 ஆம் தேதி முதற்கட்ட வாக்கு பதிவு நடை பெற்றது. அதில் 77.23 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
இரண்டாம் கட்டமாக இன்று அன்னூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், சூலூர் ஆகிய 7 ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்ட வாக்கு பதிவிற்காக 415 வாக்கு மையங்களில் 878 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 158 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் 80 வாக்கு சாவடிகளில் மத்திய அரசு அலுவலர்கள் “மைக்ரே அப்சர்வர்களாக” பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 37 வாக்கு சாவடிகளில் வெப் கேமரா பொறுத்தப்பட்டு “வெப் ஸ்ட்ரீமிங்” மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதில் 10 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 46 பேர் போட்டியிடுகின்றனர். 89 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 367 பேரும், 101 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 383 பேரும், ஆயிரத்து 14 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 ஆயிரத்து 221 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்று நடை பெற்று வரும் 7 ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 295 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பாதுகாப்பு பணிகளுக்காக 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆம் தேதி நடந்த முதற்கட்ட வாக்கு பதிவின் வாக்கு பெட்டிகள் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் உள்ளது.