February 12, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இவ்வாய்வு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்ததாவது:
ஏழை, எளிய விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் தமிழகம் முழுவதும் பயிர்கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி கடந்த ஜனவரி 31ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் 27 ஆயிரத்து 920 விவசாயிகளுக்கு ரூ.392.43 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி சான்றிதழ்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலங்களை வழங்கிய நில உடமைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகையினை விரைந்து வழங்கிட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பீட்டில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை நடைபெற்றும் உயர்மட்டபாலம் அமைக்கும் பணி, உக்கடம் -ஆத்துப்பாலம் மேம்பாலம் நீட்டிப்பு பணி, திருச்சி சாலை மேம்பாலப்பணி, கவுண்டம்பாளையம் மேம்பாலம் பணி ஆகிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.பொள்ளாச்சி, மேட்டுபாளையம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாளசாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.