January 5, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்திற்கு 70 அம்மா மினி கிளினிக் தொடங்கப்படவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறியிருப்பதாவது:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மா மினி கிளினிக்குகளை கடந்த டிசம்பர் 14ம் தேதி துவக்கி வைத்தார். அதன்படி, கோவை மாநகராட்சி பகுதியில் 18 மினி கிளினிக், ஊரக பகுதிகளில் 43 மினி கிளினிக், நகராட்சி பகுதிகளில் 4 மினி கிளினிக், 5 நடமாடும் மினி கிளினிக் என மொத்தம் 70 மினி கிளினிக் கோவை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாநகரட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் மினி கிளினிக் துவங்கப்பட்டு வருகின்றன. அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவமனை பணியாளர் ஆகியோர் பணிபுரிவார்கள்.சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அம்மா மினி கிளினிக்குகள் செயல்படும். பார்வை நேரத்தை பொருத்தவரை பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மேலும் கூடுதலாக ஒரு மணி நேரம் அதாவது இரவு 8 மணி வரை செயல்படும். மினி கிளினிக்கில் மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர் உடனுக்குடன் மருந்து மாத்திரை வழங்கப்படும்.
குறிப்பாக, சர்க்கரை அளவு, ரத்த சோகை, சிறுநீர் அல்புமின், சிறுநீர் சர்க்கரை, சளி பரிசோதனை, சிறுநீர் மூலம் கர்ப்பத்தை உறுதி செய்தல் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அம்மா மினி கிளினிக் திட்டத்தினை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.