November 6, 2019 தண்டோரா குழு
கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் பிளேடால் கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் ராஜவீதி பகுதியில் உள்ள டி.கே மார்க்கெட்டில் மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது குடும்பச் சொத்து பத்திரத்தை மோகன்ராஜின் மனைவியின் உறவினர் ராம்குமார் அடமானமாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வைத்துள்ளார். மேலும் 5 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைப்பதாக சொல்லி 30 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். இந்த தகவல் அறிந்த மோகன்ராஜ் கோவை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள மாநகர குற்றப்பிரிவில் மோசடி புகார் அளித்தார்.
ஆனால் மோசடி புகாரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனம் உடைந்த மோகன்ராஜ் இன்று மீண்டும் மாநகர குற்றப்பிரிவில் புகார் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டுள்ளார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் பிளேடால் கழுத்து கை என மூன்று பகுதிகளில் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.