August 27, 2019 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சொத்து வரியை 100% (நூறு சதவிகிதம்) உயர்த்திய தமிழக அரசு மற்றும் கோவை மாநகராட்சியின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்தும், மேலும் “சூயஸ்” எனும் வெளிநாட்டு நிறுவனத்தோடு 26 ஆண்டு காலம் போடப்பட்ட குடிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாடடம் நடைபெற்றது.
கடந்த 23.07.2018 அன்று , நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிப் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவிகிதமும், வாடகை குடியிருப்புக் கட்டடங்களுக்கு 100 சதவிகிதமும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவிகிதமும் , சொத்து வரி உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, அதை கோவை மாநகராட்சி நிர்வாகம் தற்போது அமுல்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியில் கடந்த எட்டு ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் மாநகராட்சி நிர்வாகம் செய்து தர மறுக்கிறது.
கோவையில் குப்பைகள் சரிவர எடுக்காமல் மலை போல் குவிந்து கிடக்கிறது . பல பகுதிகளில் 10 நாள் , 15 நாள் , மாதத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப் படுகிறது. சாக்கடைகள் தூர் வாரப் படுவதில்லை. புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை . சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக கோவை மாநகராட்சி திகழ்கிறது. பாதாள சாக்கடை கட்டுமான பணிகள் கடந்த சுமார் எட்டு ஆண்டு காலமாக முடிக்கப்படாமல், பல பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.கோவை மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் 10,000 க்கும் (பத்தாயிரம்) மேற்பட்ட தெருவிளக்குகள் எரியாமல் பல்வேறு நகர்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. மேற்கண்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்காக திமுக சார்பில் ஆணையாளரிடம் பல கடிதங்கள் கொடுத்தும், பலமுறை பொதுமக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தியும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்புறம் (செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகில்) சொத்துவரி மற்றும் வணிக கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்படுத்துகின்ற கட்டிடங்களுக்கு நூறு சதவிகிதம் வரிஉயர்வு செய்த தமிழக அரசின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்தும், மேலும் “சூயஸ்” எனும் வெளிநாட்டு நிறுவனத்தோடு 26 ஆண்டு காலம் போடப்பட்ட குடிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.