June 14, 2021
தண்டோரா குழு
தடகளம் மற்றும் பல்வேறு விளையாட்டு மாற்றுத்திறனாளி வீரர்,வீராங்கனைகளுக்கென
கொரோனா தடுப்பூசி முகாம் கோவை மண்டல பாரா ஒலிம்பிக் அலுவலகத்தில் நடைபெற்றது.
கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் பாரா ஒலிம்பிக் வீரர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தி இருந்தார்.அவரது அறிவுறுத்தலின் படி கோவை நேரு ஸ்டேடியம் வளாகத்தில் அமைந்துள்ள தமிழக பாரா ஒலிம்பிக் சங்கத்தின் கோவை மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முன்னதாக முகாமை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.இதில் தமிழக பாரா ஒலிம்பிக் சங்க துணை தலைவர் கிருபாகர் ராஜா மற்றும் கோவை மாவட்ட தலைவர் கன்னியப்பன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பாரா ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில் தடகளம் மற றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளி வீரர்,வீராங்கனைகள் பலர் முகாமில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த கொண்டனர்.