April 5, 2019 தண்டோரா குழு
கோவை மக்களவை தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு ஆதரவு அளிப்பதாக கோவை பம்ப்செட் மற்றும் உரிதிபாகங்கள் தயாரிப்பாளர்கள் (கோப்மா) சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கோப்மா சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஜி.ராமகிருஷ்ணன்,
கோவை மாவட்டத்தில் சுமார் 3000 பம்ப் உற்பத்தி செய்யும் சிறு,குறு நிறுவனங்கள் உள்ளன. மேலும் 300 வார்ப்பட தொழிற்சாலைகளும் 200 கிரைண்டர் நிறுவனங்களும், 30,000 சிறு குறு லேத் பட்டறைகளும் உள்ளன. மத்திய அரசின் தவறான முடிவுகளால் இந்த நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் துவண்டு போயிருந்த நேரத்தில் ஜி.எஸ்டி வரியையும் புகுத்தியதால் பல்வேறு சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்த கோரிக்கையை எங்களிடம் முன்வைத்தனர்.அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும், ஆட்சி மாற்றம் ஆன உடனே கோரிகைக்களை நிறைவேற்றித் தருவதாகவும் ,உறுதி அளித்துள்ளோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கோப்மா தலைவர் மணிராஜ்,
முரண்பாடான வரிவிதிப்பு கொள்கையால் பல சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டது. இந்த வரியை 5சதவீதமாக குறைக்க வேண்டும். ஜாப் ஒர்க்கிற்கு வரி விதிக்க கூடாது. நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தார், எங்கள் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், மா.கம்யூ கட்சிதான் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி கொடுத்துள்ளதால்,. இந்த மக்களவை தேர்தலில் எங்கள் சங்கத்தினர் திமுக கூட்டணியை சேர்ந்த மா.கம்யூ வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.