April 4, 2019 தண்டோரா குழு
கோவையில் காது கேளாத வாய் பேச இயலாத 6 வயதிற்கு உட்பட்ட 200 குழந்தைகளுக்கு அரசு காப்பீட்டு திட்டம் மூலமாக கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை காக்ளர் இம்பிளேன்ட் சிகிச்சை செய்துள்ளது.
பிறவியிலேயே காது கேளாத வாய் பேச இயலாத குழந்தைகளுக்கு தகுந்த நேரத்தில் முறையான சிகிச்சைகள் அளிக்கும் போது விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது.இது குறித்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், சிறுவர்களுக்கான Cochlear Implant சிகிச்சைக்கு சாதாரணமாக ரூ. 7 லட்சம் வரை செலவாகும். கடந்த இரண்டரை வருடங்களில் காது கேட்காத, வாய் பேச முடியாத 200 குழந்தைகளுக்கு தமிழக அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் Cochlear Implant சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் ஆனந்த் மற்றும் அவரது குழுவினர் மூலமாக இலவசமாக அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த குழந்தைகளுக்கு பேசுவதற்கான சிகிச்சைகள் அளித்து கொண்டிருக்கிறோம். இதனால் அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் மகிழ்ச்சியைப் பார்க்கிறோம். குழந்தைகளை பேச வைப்பது நல்ல விஷயம். என்னுடைய அனுபவத்தில், என்றைக்குமே மனநிறைவை தரக்கூடிய நிகழ்ச்சி இது என அவர் தெரிவித்தார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் அறுவை சிகிச்சைகள் செய்து குணமடைந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.