April 5, 2026
தண்டோரா குழு
கோவையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் 2026ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி சேர்பேர்ஷன் நந்தினி ரங்கசாமி தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ஹாரத்தி முன்னிலை வகித்தார்.
முதல் அமர்வில் குஜராத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் எஸ். சுந்தர் மனோகரன் கலந்து கொண்டு முதுகலைப் பட்டப்படிப்பு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
இரண்டாம் அமர்வில் கல்லூரி செயலாளர் யசோதா தேவி வரவேற்புரை ஆற்ற, கல்லூரி இயக்குநர் சதாசிவம் முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்வில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரஞ்சித் கிருஷ்ண பாய் கலந்து கொண்டு அடிப்படை அறிவியல், சமூக அறிவியல், மானுடவியல் மற்றும் பி.வோக். படிப்புகளில் பயிலும் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வுகளில் மொத்தம் 3,213 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.