December 23, 2019
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான பாலமலை, பொன்னுத்து அம்மன் மலைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன.
இவைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவை தேடி ஊருக்குள் வரும். யானைகள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் பாலமலை அடுத்துள்ள பெருக்குபதி ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த 45 வயதான சின்னசாமி என்பவர் அருகிலுள்ள குஞ்சூர் பகுதியிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி நடந்து வந்துள்ளார். இவர் மத்திய அரசின் சென்ட்ரல் ஏக்சசில் சிப்பாய்-யாக வேலை செய்து வருகிறார். இவர் நடந்து வரும்போது, இருட்டில் அங்கு நின்று இருந்த யானை ஒன்று அவரை தனது தும்பிக்கையால் தூக்கி வீசி கீழே போட்டு மிதித்துள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனை பார்த்த ஆதிவாசி மக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து மேற்கொண்டு யானைகள் வராமல் இருக்க பார்த்துக்கொண்டனர்.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.