October 5, 2018
தண்டோரா குழு
ரெட் அலர்ட் எதிரொலியடுத்து கோவை, நீலகிரி, மதுரை, குமரிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 5 குழுவினர் விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில், 20.5 செ.மீ., மழை பதிவாகும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவியை தமிழக அரசு கோரியது. இதனையடுத்து 5 தேசிய பேரிடர் மீட்புக்குழு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. நீலகரி, கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 5 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புறப்பட்டுள்ளனர்.
இதில், நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ஒரு மீட்புக்குழுவும், கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு 2 மீட்புக்குழுவினரும் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களில் இருந்து மக்களை மீட்க தயார் நிலையில் வைக்கப்படுவர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.