March 19, 2021
தண்டோரா குழு
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மன் குளம் ஹவுசிங் யூனிட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். 15 ஆம் தேதி முதல் கோவையில் முகாமிட்டு உள்ள கமல்ஹாசன் பந்தய சாலை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவாறு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
தொடர்ந்து ராமநாதபுரம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்த கமல்ஹாசன் கொங்கு மண்டலத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அம்மன் குளம் ஹவுஸிங் யூனிட் பகுதியில் 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு, முறையாக குப்பைகள் அகற்றப்படாதது உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த கமல்ஹாசன், வீதி வீதியாகச் சென்று அடிப்படை கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வீதி வீதியாகச் சென்று மக்களிடையே பேசி வாக்கு சேகரித்த கமல்ஹாசன் தான் வெற்றி பெற்றால் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.