April 16, 2025
தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள டிரினிட்டி சிறப்பு கண் மருத்துவமனையில் புதியதாக கான்டோரா லாசிக் (Contoura Lasik) கருவியின் துவக்க விழா இன்று நடந்தது. இந்த லாசிக் சிகிச்சை வசதியை பிரபல திரைப்பட நடிகை மீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் டி.எம். சுப்பாராவ் தலைமையுரை ஆற்றினார். கவுரவ விருந்தினராக ரோட்டேரியன் செல்லா.கே.ராகவேந்திரன் பங்கேற்று பேசினார்.டிரினிட்டி கண் மருத்துவமனையின் வெற்றி பயணம் பற்றி நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதர் பேசினார்.விழாவில் அனைவரையும் டிரினிட்டி ஐ கேர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மிருதுளா சுனில் வரவேற்றார்.
மருத்துவ இயக்குனர்,முதுநிலை கண் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் முகமது ஷபாஷ் பேசுகையில்,
“கான்டோரா விஷன் எனப்படும் டோபோகிராபி வழிகாட்டுதல் லாசிக் லேசர் சிகிச்சை அதிநவீனமானது. கண் கருவிழியில் மிகவும் துல்லியமாக செயல்பட்டு, பார்வையை சரி செய்யும். கிட்டப்பார்வை, துாரப்பார்வை, பார்வை குறைபாடுகளை சரி செய்யும். கண் மணியில் உள்ள குறைபாடுகளை துல்லியமாக சரி செய்து, கருவிழியை சீர் செய்யும். தனிப்பட்ட முறையில் பாரம்பரிய லாசிக் சிகிச்சையாக இது திகழ்கிறது.
கண்பார்வையை மேம்படுத்தவும், இரவில் தரமான பார்வையையும் அளிக்க உதவுகிறது. லாசிக் அறுவை சிகிச்சையோடு ஒப்பிடும்போது கான்டேரா விஷன், அதிக அளவில் வெற்றி பெறுவதோடு, கண்பார்வையின் தரமும் நன்றாக உள்ளது. இதன் விளைவாக கண்பார்வை மேம்படுவதோடு, நோயாளிகள் பெரும் திருப்தியடைவர்,” என்றார்.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதர் பேசுகையில்,
“ கண்களை கவனிப்பதில் நிபுணத்துவம், அனுபவமிக்க பணியாளர்கள், அன்பான, கடமை உணர்வும், கவனிப்பும் எங்களை முன்னிறுத்துகிறது. மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பதோடு, நம்பிக்கை மிகுந்த கண் மருத்துவமனையாக டிரினிட்டி கண் மையம் திகழ்கிறது. கண்களின் தன்மைக்கும், குறைபாடுகளுக்கும் ஏற்றவாறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார்.
மருத்துவ செயல் இயக்குனர், பிறழ்நிலை விழிப்படலம் அறுவை சிகிச்சை முதுநிலை ஆலோசகர் டாக்டர் மதுசூதனன் நன்றி தெரிவித்தார். டிரினிட்டி கண் மருத்துவ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாஸ்மின், கேட்ராக்ட் முதுநிலை ஆலோசகர் டாக்டர் மும்தாஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.