December 8, 2018 தண்டோரா குழு
கோவை சோமையம்பாளையம் பகுதியில் ஊருக்குள் 12 காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இந்நிலையில் சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக நேற்றிரவு நுழைந்தன. குடியிருப்பு பகுதிகளில் யானைகள் கூட்டங்கூட்டமாக உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர். யானைக்கூட்டம் குடியிருப்பு பகுதிகளை கடந்து ஒரு முட்காட்டில் நின்றுள்ளன. யானைகளை கண்காணித்து வரும் வனத்துறையினர் யானைகளை விரட்ட போராடி வருகின்றனர். இதேபோல தூடியலூர் அருகே அப்பநாய்க்கன்பாளையத்தில் கிராமத்திற்குள் நுழைந்த 3 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.