July 22, 2020
தண்டோரா குழு
கோவை செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட் ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்தவர் ஹக்கீம். இவர் வாகன மோசடியில் ஈடுபட்டார்.வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்ட வாகனங்களை உரிமையாளரிடம் பெற்று அதனை வேறு நபர்களுக்கு கொடுத்து வந்தார். அந்த வாகன உரிமையாளர் வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்துவதில்லை.மேலும் வாகனத்தை வங்கி பறிமுதல் செய்ய வந்தால் உரிமையாளரிடம் இருப்பதில்லை. ஹக்கீம் அதனை வேறு நபர்களுக்கு கமிஷன் அடிப்படையிலோ அல்லது குறைந்த விலையிலோ விற்றுவிடுவார். இதுபோன்று நீண்டநாட்களாக மோசடி நடைபெற்றதால் இதுகுறித்து ஏராளமானவர்கள் செல்வபுரம் மற்றும் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹக்கீமை கைது செய்தனர்.செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதாசலம் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 15 கார்கள், ஒரு ஆட்டோ, 30 இருசக்கர வாகனங்கள் உள்பட 46 வாகனங்களை பறிமுதல் செய்தனர். கைதான ஹக்கீம் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், ஏராளமான வாகன மோசடியில் ஈடுபட்டதால் ஹக்கீமை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹக்கீமிடம் இதற்கான நகலை போலீசார் நேற்று வழங்கினார்கள்.