March 7, 2018 தண்டோரா குழு
கோவை சிறுவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் இடத்தை பார்வையிட சென்ற அனைத்து கட்சியினரை தமிழக எல்லையான ஆனைகட்டி பகுதியில் தமிழக காவல் துறையினர் கைது செய்தனர்.
சிறுவானி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டி வருகின்றது.ஏற்கனவே மஞ்சகண்டி,தேக்கு வட்டை பகுதியில் இரண்டு தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது தடுப்பணை கோட்டத்துறை என்ற இடத்தில் கட்ட ஏற்பாடுகள் நடைபெறுகின்றது.
இந்நிலையில் கேரள அரசு மூன்றாவது தடுப்பணை கட்டும் இடத்தை பார்வையிட கோவையில் இருந்து திமுக, காங்கிரஸ், மதிமுக, த.பெ.தி.க உள்ளிட்ட அனைத்து கட்சி குழுவினர் சென்ற போது மாநில எல்லைப்பகுதியான ஆனைகட்டியில் தமிழக காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மேலும்,கேரள அரசை கண்டித்து தமிழக எல்லையில் அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உடனடியாக கேரள அரசு தடுப்பணை பணிகளை நிறுத்த வேண்டும், தமிழக அரசு தலையிட்டு தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும் எனவும்,கேரள அரசை கண்டித்து விரைவில் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன் எடுக்க உள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்தார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடு்பட்ட 70க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சின்ன தடாகம் பகுதியில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளர்.அனைத்து கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆனைக்கட்டி பகுதியில் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.